கூத்து!

உரசலாவது கேட்கட்டும்!

Wednesday, April 12, 2006

மீனவர் பிரச்சனை - விவாதம்.

இதுவரை இந்த பிரச்சனை பற்றிய பதிவுகளையும் மற்ற செய்திகளையும், ஒரு வசதிக்காக தொகுத்து வைத்திருக்க மட்டும் இந்த பதிவு. இதற்கு பிறகு எழுதப் படும் பதிவுகளையும், கண்ணில்படும் செய்திகளையும் இங்கே சேமிக்க உத்தேசம்.

ஏற்கனவே ஒருமுறை தொகுத்த பின்பு வந்தியதேவன் மேலும் இரண்டு பதிவுகள் எழுதியுள்ளார். வழக்கமான ஜல்லியடிப்புகளை(என்று நான் நினைப்பதை) தாண்டி அவரது கடைசி பதிவு மீண்டும் தகவல்பூர்வமாக இருப்பதால், அதை சீரியசாகவே எடுத்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதே பதிவில் (நான் தவறவிட்ட) வேறு சில பதிவுகள் பற்றிய தகவல்களும் உள்ளன. ஜெயலலிதாவின் அறிவிப்பு வரவேற்புக்கு உரியது. ' கச்சத்தீவை மீட்போம்' என்று சுமார் 8 (சரியாய் நினைவில் இல்லை) வருடங்கள் முன்பு போராட்டக் களத்தில் இறங்கிய ராமதாஸ் போன்றவர்களின் குரல்களை விட, ஜெயலலிதா போன்றவர்களின் குரல்களுக்கு நடைமுறை சாத்தியப்பாடு அதிகம் என்ற காரணத்திற்காக வாவது இதை வரவேற்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஜெயலலிதாவின் குரல் போலியானது என்று அவரை தீவிரமாய் எதிர்த்து வருபவர்களுக்கு தோன்றலாம். ஆனால் இது போன்ற குரல்கள் எங்கு ஒலித்தாலும் அவற்றை நிபந்தனை இன்றி ஆதரிப்பதே, இந்த பிரச்சனை குறித்த கரிசனம் கொண்டவர்கள் செய்யவேண்டிய (அரசியல் லாபங்கள் தவிர்த்த) நடவடிக்கையாக எனக்கு தோன்றுகிறது.

' வெறும் கேள்வியின் நாயகனாய் வலைப்பதிவில் வெட்டி வேலை செய்பவர், பிரச்சினையின் கிளை வேர்களைப் பற்றவாவது முயற்சிகள் செய்திருக்கலாமென்ற ஆதங்கத்தை இங்கே பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று என்னை பற்றி ஆதங்கப்படுவதாய் வந்தியத்தேவன் காட்டிக் கொண்டிருந்தார். தான் நோக்குகிற(அல்லது கைகாட்டுகிற) கோணத்தில்தான் பிரச்சனையை அணுகவேண்டும், அவ்வாறு அணுகாவிட்டால் லேபிள் ஒட்டும் வேலை செய்பவர்களிடம் எந்த விவாதமும் சாத்தியமில்லை. வந்தியத்தேவனை போல இந்திய கடற்படை, அல்லது இந்தியா இன்னும் தமிழ்தேசிய கருத்துக்கள், புலிகள் என்று எதற்குமே வக்காலது வாங்கவோ, பாதுகாக்கவோ எனக்கு எந்த தேவையும் கிடையாது. பிரச்சனையின் வேர் கிளை என்று தனக்கு வசதிப்படும் ஒன்றை கற்பிதம் செய்யும் தேவையும் கிடையாது. திறந்த மனதுடன் பிரச்சனையை அணுகுவது மட்டுமே என் நோக்கம். வந்தியதேவன் திமிருடன் நினைப்பது போல் அல்லாமல், இணையத்திலும் பத்திரிகைகள் வாயிலுமாக இந்த பிரச்சனை குறித்து எனக்கு எட்டும் தகவல்களை தேடி படித்து கொண்டுதான் இருக்கிறேன். அவை குறித்தும், அவைகளை முன்வைத்தும் எளிதான முடிவுகள் எதையும் எடுக்கவில்லை, எடுப்பதில்லை. சரியாக கவனித்தால், தன் கடற்பரப்பிற்குள் இலங்கை கடற்படை நிகழ்திய அத்துமீறல் பற்றி இந்தியா காட்டும் மௌனம்,'அலட்சியம்' பற்றியும் கேள்விகள்தான் கேட்டிருக்கிறேனே ஒழிய எதையும் முடிவாக சொல்லவில்லை. (வந்தியதேவன் அதை பற்றி திசை திருப்பலும், தேர்தெடுத்த சப்பைக் கட்டு மட்டும் கட்டுவதை காணலாம்.) ஆனாலும் பெரிய அளவில் விஷய ஞானம் இல்லாததை ஒப்புகொள்வதிலும் தயக்கம் கிடையாது. மிக தெளிவாக தங்கள் சார்புகள் எந்த பக்கம் என்று தெரியும் வகையில், 'இந்துத்வா, வெள்ளை கலர், ஆரியம்' என்று மற்றவர்கள் ஒட்டாத லேபிளை ஒட்டுவார்கள் என்று தாங்களாக அசட்டு நகைச்சுவை செய்து வரும் முகமுடி, வந்தியத்தேவன் போன்றவர்கள்தான் மாற்று குரல்களுக்கு தங்கள் மனதை திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த அளவுக்கு விவாதம் நடந்ததையும், இனி தொடர்ந்து நடபெறப் போவதையுமே நான் எழுதிய நோக்கம் நிறைவேறியதாக கருதுகிறேன்.

எனக்கு தெரிந்து இதுவரை இந்த பிரச்சனை பற்றி பேசும் பக்கங்களின் சுட்டிகள் கீழே. மேலே வரும்போது சேர்க்கப் படும்.

இன்னும் எத்தனை காலம்தான்...??!! -1

இன்னும் எத்தனை காலம்தான்..! -2

வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!-1

வன்னியன் எழுதிய தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை பற்றிய பதிவு

வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2

சில நேரங்களில் சில மனிதர்கள்-3

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

சில நேரங்களில் சில மனிதர்கள்-5

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.

வந்தியத்தேவனின் விவாதக் கூ(கு)த்துகள்-1

விவாதக் கூ(கு)த்துகள் - 2

எனது இப்போதைக்கு!

விவாதக் கூ(கு)த்துகள் - 3

கச்சத் தீவை நிரந்தர குத்தகையில் பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்: ஜெயலலிதா பேச்சு
(நன்றி முகமுடி)

கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு (வந்தியத்தேவன்)

கச்சத்தீவு - டாகடர் செல்வி ஜெயலலிதாவின் பங்களிப்பு - 2 (வந்தியத்தேவன்)

கடைசியாகக் கச்சத்தீவு

கச்சத்தீவு பற்றி என்னாரின் பதிவு.

தவறு யாருடையது? நாமக்கல் ராஜா.

சிங்கள மீனவருக்கு ஒரு நீதி, தமிழ் மீனவருக்கு ஒரு நீதியா? மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தமிழருக்கெதிரான கூட்டு சதி

தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை


(இன்னும் வரும், தமிழ் மீனவர்களின் பிரச்சனைகளோடு தொடர்புடைய பதிவுகள்/இணைய பக்கங்கள் பற்றி இங்கே அறிய தந்தால் நன்றி.)

Tuesday, April 11, 2006

காட்சியும் கதையும்!

மேலும் பேசுவதோ எதிர்வினை வைப்பதோ பயனற்றது, அல்லது அதற்கான தேவை இல்லாதது என்று கருதியே நிறுத்தியிருக்கிறேன். முத்துவிற்கு என்ன நோக்கமோ, வேண்டுமென்றே எல்லாவற்றையும் திசை திருப்பி திரித்து தர்க்க சுயமைதுனம் செய்து, ஸ்கலிதத்தை முகத்தில் அடிப்பவரை, ஏதாவது கிடுக்கிப் பிடி கேள்வி கேட்டு, தன் வாதம் எதற்காவது செவி சாய்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கலாம். அது எப்படியிருந்தாலும், முத்து சொல்வதையும் நான் ஏற்கவில்லை. உதாரணமாய் இந்தியாவை எல்லோரும் கிள்ளுக்கீரையாய் நினைக்கிறார்கள் என்பதை. இலங்கை உட்பட யாரும் அப்படி நினைக்கவில்லை, இலங்கையின் அத்துமீறலும் கிள்ளுக்கீரையாய் நினைப்பதனால் விளைந்தது அல்ல என்றே நினைக்கிறேன். அவரது பழைய பின்னூட்டத்திற்கு பதிலாகவும் ஏற்கனவே இதை சொல்லியிருக்கிறேன். ஒரு உதாரணம் வேண்டுமெனில் இலங்கையில் தனது தளத்தை அமைக்கவேண்டும் என்பது அமேரிக்காவின் நெடுநாளய அவா. இன்னமும் இலங்கை அதற்கு இடமளிக்காமல் இருப்பது, இந்தியாவை கிள்ளுக்கீரையாய் நினைக்காததனால் மட்டுமல்ல, இந்தியாவின் சொல்லுக்கு இலங்கை எத்தனை மதிப்பளிக்கும் என்பதனாலும்தான்.

வந்தியத்தேவன் நான் 'இந்திய எல்லை, அதன் இறையாண்மை' பற்றி கவலைகொண்டு எழுதியதாக சொல்லி(அல்லது அவரது முதல் பதிவில் சொன்னது போல் அவ்வாறு நக்கலடித்து), இந்த விஷயத்தில் நானும் தங்கமணியும் 'வேறுபடுவதை' சொல்லி, சில வாதங்களை தன் வழக்கமான பாணியில் முன்வைக்கிறார். அதற்கு பதில் சொல்வது நோக்கமில்லை எனினும், ஒரு தெளிவிற்காக என் கருத்து பற்றிய தவறான புரிதலைகளை களையும் பொருட்டு, இந்த தேசிய இறையாண்மை சமாச்சாரங்கள் பற்றி எழுத வேண்டியுள்ளது. வந்தியத்தேவன் நான் எழுதியதை இங்கே திரித்ததாக நான் நினைக்கவில்லை. இப்படிப்பட்ட தவறான வாசிப்புகளுக்கு வாய்ப்பு இருப்பதாகவே எண்ணுகிறேன்.

இது தொடர்பாக முடிந்தவரை சுயதெளிவுடன் வார்த்தைகளை கவனமாக கையாண்டிருப்பதாகவே எண்ணுகிறேன். நான் இந்திய எல்லை, அதன் இறையாண்மை இவற்றை முன்வைத்து கேட்ட கேள்விகளை நான் மட்டுமல்ல, ஒரு ஜப்பான்காரனும், பிரஞ்சுகாரனும் கூட கேட்கமுடியும். இந்திய எல்லை, இறையாண்மை இவற்றை பற்றி கவலைப்படாமல், அலட்டாமல், அதன் மீதான சவாலை அத்துமீறலை இந்தியா எப்படி அனுமதிக்கிறது என்று கேட்பதன் மூலம், அதற்கான காரணம் பிண்ணணி பற்றி அறிவதும் அதை முன்வைத்து பேசுவதும்தான் முக்கியமே ஒழிய, இதை சொன்னதனால், கவலை இறையாண்மை பற்றியதானது என்பதாகாது.

நம் மீது கவியும் கட்டாயம் நிர்பந்தம், எதிர்ப்பதனால் ஏவப்படக் கூடிய வன்முறை, இவற்றை மீறி, இந்தியா என்ற கட்டமைப்பை, வசதி அனைவரது பாதுகாப்பு, பொருளாதார காரணிகள் இன்னும் பல பல விஷயங்களை மனதில் கொண்டும் ஒப்புகொள்கிறேன். அதை விட முக்கியமாக, இந்தியாவின் வலிமை குறிப்பாய் அதன் ராணுவ வலிமையை மனதில் கொண்டு, இந்த சட்டகத்தை உடைக்க நினைக்கும் எல்லாவகை போராட்டங்களும், அந்த போராட்டம் சார்பானதாக சொல்லி கொள்ளும் மக்கள் மீது பாயக்கூடிய வன்முறை உயிர்பலிகளை மனதில் கொண்டேனும், இந்த சட்டகத்தில் கை வைக்கக் கூடிய முயற்சி எதையும் பொதிவானதாக காணமுடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் இந்த கட்டமைப்பு ஏதோ மாற்றத்திற்கு உட்படாத விஷயமாகவோ, இயற்கையானதாகவோ, அதை கேள்விகுட்படுத்துவது எல்லா சந்தர்ப்பங்களிலும் பாவமானதாகவோ, அதன் பின் திட்டமிட்டு சிறு வயது மூளையில் பசுமரத்தாணி போல் அடித்ததில் தொடங்கி, ராட்சத ஊடகங்கள் மூலம் கற்பிக்கப் பட்ட புனிதத்தை ஒப்புக்கொண்டு அதை ஏற்கவில்லை. அந்த வகையில் இறையாண்மை போன்ற வார்த்தைகளுக்கு, அதன் பின்னுள்ள கற்பிதமான அருத்தங்களுக்கு எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. இந்திய தேசியம் என்ற பெயரில் முன்வைக்கப் படும் பல நியாயமற்றவைகளை, அநியாயங்களை, பல (நான் மொழிரீதியாய் அடையாளம் காண விரும்பும் தமிழினம் உட்பட) இனங்கள் மீதான வன்முறைகளை, என் சுய கணிப்பின் படி தங்கமணியை விட இன்னும் அதிகமாகவே (என் பதிவுகளில் அதற்கான ஆதாரம் இருக்கும் என்று தோன்றாததால்) மன அளவில் எதிர்கிறேன் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நானும் தங்கமணியும் தெளிவான வகையில் வேறுபடுவது தமிழ்தேசியம் குறித்தான பார்வையில் மட்டுமே. தமிழ்தேசியம் பேசப்படுவதற்கான நியாயத்தையும், அவசியத்தையும் நான் நிச்சயமாய் அங்கீகரிக்கிறேன். ஆனால் அதையும் இயற்கையானதாகவும், புனிதமானதாகவும் கற்பிக்கப் படுவதையே நிராகரிக்கிறேன். அதைவிட முக்கியமாய் தேசியம் சார்ந்த ஒரு லட்சியத்தை முன்னிறுத்தி பல வன்முறைகள், படுகொலைகள் நியாயப்படுத்தப் படுவதையும், கண்டிப்பதில் ஒரு தேர்தெடுத்தல் நிகழ்வதையும், இதர பாசிச சொல்லாடல்கள் என்று கருதப்படுவதையும் எதிர்கிறேன். அந்த வகையிலேயே தங்கமணி, சுந்தரவடிவேல் ஆகியோருடன் கடுமையாய் முரண்பட்டு, கண்டனங்களுடன் அவர்கள் எழுதியதை நான் எதிர்த்து எழுதியதும் நிகழ்ந்தது.

சிவக்குமார் கூட நான் இது குறித்து (புலிகள், தமிழ் தேசியம் போன்றவை குறித்த விமரசனக்களை) அதிகமாய் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். எழுதுவது என்பதை ஒரு திட்டமிட்ட செயல்பாடாக நான் இன்னும் வைத்துக் கொள்ளவில்லை. அந்தந்த சந்தர்ப்பங்களில், தானாக அது நடந்து கொண்டிருக்கிறது. சும்மா இருப்பதை விட இது சிறந்ததாக எனக்கு தெரிகிறது. ஆனாலும் இதில் எழுதுவது என்பதை சூழநிலையே தீர்மானிக்கிறது. ஷோபாசக்திக்கு புலிகளை விமர்சித்து எழுதுவது ஒரு இருப்பு குறித்த பிரச்சனையாகவும், உயிர்வாழ்தலுக்கு பொருளுணர்துவதாவதாகவும், சூழலின் தேவையாகவும், இன்னொரு பக்கம் உயிராபத்து ஏற்படுத்துவதாகவும் இருக்கக் கூடும். எனக்கு அப்படி அல்ல. சொல்லப் போனால் வாய்த்திருக்கும் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் புலிகளை, தமிழ் தேசியவாதிகளை திட்டுவது மிகவும் எளிது. அதன் சொல்லாடல்களை கட்டுடைப்பதும் கம்புசுத்தும் வேலையல்ல. ஆனால் இந்திய தேசியத்தை எதிர்ப்பது, அதன் சொல்லாடல்களின் புனிதத்தை ஏற்காமல் இருப்பது குட்டி பூர்ஷ்வா சொகுசு வாழ்க்கைக்கு உலை வைக்கக் கூடியது. இதை மட்டும் அப்படியே சூத்திரமாக கொள்ளாமல், சந்தர்ப்பத்திற்கு ஏற்றார்போல் எதிர்வினை வைப்பதை மட்டுமே என் இருத்தல் சார்ந்த செயல்பாடாக நான் நினைக்கிறேன்.

மேலும் இவற்றில் ஒரு அடிப்படை பிரச்சனை இருக்கிறது. என்னை பொறுத்தவரை சிங்கள் அரசு, புலிகள் அமைப்பு இரண்டையுமே பாசிச அமைப்புகளாகத்தான் கருதவேண்டியுள்ளது. இதையும் சமமான அழுத்தத்துடன் சொல்லிவிட முடியாது. சிங்கள பாசிசத்தின் எதிர்விளைவாகவே புலிபாசிசமும் நிகழ்ந்திருக்கிறது. அதைவிட முக்கியமான ஒரு வித்தியாசமுண்டு. சிங்கள அரசு முற்றிலும் லெஜிடிமைஸ் செய்யப்பட்டு, எல்லா நாடுகளாலும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. புலிகள் அமைப்பு பல நாடுகளால், இப்போது கடைசியால் அடிமடியில் கைவைக்கும்விதமாக கனடாவிலும் தடை செய்யப் பட்டுள்ளது. இந்த வித்தியாசங்களை கணக்கில் கொள்ளாமல் பேசமுடியாது. அதே நேரம் இந்த வித்தியாசத்தை மட்டும் சொல்லி சொல்லி ஜல்லியடித்து படுகொலைகளை நியாயப் படுத்தவும் முடியாது.

அ.மார்க்ஸ், சோபாசக்தி இவர்கள் தேசியம் என்பதையும், அதை எதிர்பதையும் (தேசியம் என்பது பாசிசத்தை நோக்கி மட்டுமே பயணிக்கும் என்று) சாராம்சபடுத்தி பேசுவதையும், குறிப்பாக தமிழ் தேசியம் குறித்த அவர்களின் கருத்தையும் நான் முழுமையாய் ஏற்கவில்லை(அதாவது முழுமைக்கு குறைவாக ஏற்றுக்கொள்கிறேன்). குஷ்பு பிரச்சனையில் தேசிய மற்றும் கலாச்சார சொல்லாடகள் பாசிசமாய் வெளிபட்டதாகவே நானும் நினைக்கிறேன். ஆனாலும் தேசியம் என்பது சமய சந்தர்பங்களுக்கு ஏற்ப ஒரு ஆயுதமாய் பயன்படுவதையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். தேசியம் சார்ந்த அனைத்தும் முழுவதும் கற்பிதம் மட்டுமே என்பதாகவும் என்னால் பார்க்க இயலவில்லை. அடையாளம் பற்றி பேசுவதற்கான தேவை, அந்த வேட்கைக்கான தீனி, இவற்றை மனதில் வைத்து கற்பிதங்களும் தேவை என்றுதான் நினைக்கிறேன். இது போன்ரவற்றை மிகச் சரியாக புரிந்துகொண்டே, பெரியார் தமிழ் சாராமல், திராவிடம் என்ற கற்பனை தேசியம் சார்ந்து தன் சொல்லாடல்களை முன்வைத்ததாய் நினைக்கிறேன்.

ஏதோ விளக்கமளிக்க வந்தது எங்கேயோ போய்விட்டது. இதன் மூலம் தொடரக்கூடிய விவாதத்தை வரவேற்றாலும் நான் பங்குகொள்ள இப்போதைக்கு எண்ணமில்லை. அதனால் யாவருக்கும் சொல்வதானால் நான் தமிழ்தேசியத்தை எதிர்த்தாலும், அதை ஒரு இந்திய தேசியவாதி என்ற நிலைப்பாட்டில் இருந்து செய்யவில்லை, மற்றும் என் பதிவுகளில் வெளிபடுவது மீனவர்கள் வாழ்வு சார்ந்த அக்கறைதானே ஒழிய இந்திய இறையாண்மை குறித்த அக்கறை அல்ல. இதை தெளிவு படுத்திவிட்டதால் மேலே ஜல்லியடிக்க சிலருக்கு வசதி என்றாலும், தங்கமணி என் பதிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதும், அதில் நான் முரண்படாததிலும், எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியவில்லை. இப்போதைக்கு இப்படி நிறுத்திகொள்வது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

Monday, April 10, 2006

இப்போதைக்கு!

இந்த விவாதத்தில் இப்போதைக்கு கடைசியாக கடமைக்காக எழுதிக்கொள்வது.

கருத்தளித்த எல்லா நண்பர்களுக்கும் நன்றி. ஸ்ரீகாந்த எழுதிய கடிதம் அவர் தன்னளவில் வைத்திருக்கும் நேர்மையை காட்டுகிறது. மற்ற கருத்துக்களுக்கும் நன்றி.

வந்தியத்தேவனின் மேலும் இரண்டு பதிவுகளையும் (பல்லை கடித்து கொண்டு) வாசித்தேன். மற்ற விஷயங்கள் போல அல்லாமல் இது குறித்து மீண்டும் பேசுவேன். என் கருத்துக்கள் கேள்விகள் ஏற்கனவே தெளிவாக சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். தீர்வு அல்லது தீர்வுகள் என்பதாக எதையும் பொதுவாக என் பதிவுகளில் நான் முன்வைப்பதில்லை.

சில தகவல்களை முன்வைத்து எழுதிய காரணத்தால் வந்தியத்தேவன் காட்டும் அசாத்திய திமிர்(உதாரணமாய் கச்சத்தீவு அருகில் மீன் பிடி உரிமை இருப்பதை அவர் பதிவில் படித்தே நான் தெரிந்து கொண்டதாக நினைப்பது), முதலில் இந்து பத்திரிகை பற்றி நான் பேசுவதாக திரித்துவிட்டு இப்போது டெகான் கிரோனிகிள் சுட்டி தராததை முன்வைத்து, நான் தனிப்பட்ட விளக்கமாய் தந்ததை முட்டாள்தனமாய் பற்றிக்கொண்டு உளருவது, விவாத நாகரீகம் பற்றி என்னை முன்வைத்து பேசிகொண்டே அதே வார்த்தைகளை மற்றவர்கள் மீது பிரயோகிக்கும் (பிரயோகிப்பதை நான் குற்றமாய் சொல்லவில்லை, நானும் செய்வதுதானே) அப்பட்டமான ஹிபாக்ரசி, என் கேள்விகளுக்கு பதில் தராமல் திசை திருப்புவதோடு தான் ஒரு முன்னாள் லெஃப்டிணண்ட் என்பதை நம்பகத்தன்மைக்கு ஆதரமாக தருவது என்ற அபத்தங்களை தாண்டி, எடுத்து கொள்ளவோ பதில் அளிக்கவோ எதுவும் இருப்பதாக தெரியவில்லை. என் பதிவுகள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அவர் எழுதியதில் இருப்பதாக தெரியவில்லை. மாறாக தர்க்க சுயமைதுனம் என்று நான் குறிப்பிடுவது மட்டுமே விலாவாரியாக உள்ளது. வாய்ஸ் ஆன் விங்க்ஸ் போல ஒராளவாயினும் சுய பிரஞ்ஞை உள்ள வாசகர்கள் தங்கள் அறிவு கொண்டு ஆராய்வதை தவிர, வேறு எதையும் நான் மேலே எழுதி சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. தங்களுக்கு உவப்பான சமாச்சாரங்களை வாசிக்கும் போதெல்லாம் அதை சோப்பு போல பவுடர் போல தேய்த்து மகிழ்பவர்களுக்கு எதையும் சொல்வதால் பயனில்லை. ஆனால் பிரச்சனை பற்றி எழுதுவதும், அது தொடர்பாக வந்தியத்தேவனை ஒரு உதாரணமாய் முன்வைத்து பேசுவதும் மிகவும் அத்தியவாசியமானது என்றாலும், அதை இப்போது அலுப்பான பொழுதில், கடந்த வாரம் செய்ய நேர்ந்தது போல் என் வேலையை பலியிட்டு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.

வாய்ஸ் ஆன் விங்க்ஸ் நான் எழுப்பிய கேள்விகளை தன் பார்வையில் எழுப்பி, தனக்கு பதில் வராததை மன்றாடி மறுபடி மறுபடி குறிப்பிட்டு, ஆனால் கடைசியில் விவாதத்தின் போக்கில் பணிவு, அலுப்பு, தான் வாழும் கதகதப்பான வாழ்க்கை பற்றிய உணர்வை முன்வைத்த வொயிட்மெயில் போன்ற காரணங்களால் சரணடைந்தது, விவாதம் பல நேரங்களில் எப்படி கடத்தப்படும் என்பதற்கான ஒரு உதாரணம்.

வாய்ஸ் ஆன் விங்க்ஸிற்கு ஒரு விஷயத்தை உதாரணமாக சொல்ல வேணும். வந்தியதேவன் தான் ஒரு முன்னாள் லெஃப்டிணண்ட் என்று சொன்னதை படிக்க தவறியதாகவும், அது குறித்து மதிப்பும் மரியாதையும் தெரிவித்து, வந்தியத்தேவன் சொல்வதற்கான நம்பகதன்மைக்கான ஆதாரமாக வாYஸ் ஏற்கிறார். பிரச்சனை என்னவெனில் அவர் முன்னாள் லெப்டிணண்ட் ஆக இருந்தது, அவர் அளித்த சில தகவல்களுக்கு நம்பகத்தனமையை ஏறபடுத்தக் கூடுமே ஒழிய அவரது வாதங்களுக்கு அது நம்பதகாத தன்மையையே ஏற்படுத்த முடியும். எனக்கு அவர் முன்பு ஈழத்தமிழர் விவகாரத்தில் வெறித்தனமாய் (ஆழ்ந்து போவதை குறிப்பிடும் வெறி அல்ல இது, மதவெறி, தேசிய வெறி போல தான் பற்றிகொண்ட விஷயத்தின் மீதான வெறி) விவாதித்ததை புரிந்துகொள்ள இந்தத் தகவல் உதவுகிறது. ரஜினி ராம்கி (ஒரு பேச்சுக்குத்தான், தொடர்பில்லாமல் அவர் பெயரை இழுப்பதற்கு மன்னிக்கவும், ஆனால் அதை தாராளமாய் தொங்கிகொண்டு யார் வேண்டுமானாலும் பேசலாம்) தான் ஒரு ரஜினி ரசிகன் என்பதை ரஜினி பற்றி அவர் எழுதிய புத்தகத்தின் நம்பகதன்மைக்கு ஆதாரமாக தந்தால் எப்படி இருக்குமோ அப்படி இது. எது ஆதாரம் எது எதிர் ஆதாரம் என்ற குழப்பதை சுட்ட இது.

வன்னியன் எழுதிய பதிவு குறித்து எதுவும் வேண்டுமென்றேதான் சொல்லவில்லை. வன்னியனின் கரிசனமும் அதன் நியாயமும் புரிகிறது. ஆனால் இந்த (ஈழமீனவர்கள் பாதிக்கப்படும்) பிரச்சனையை வலிந்து திசை திருப்பும் நோக்கில், அதிலேயே கவனம் குவித்து ஒருவர் எழுதும் போது, ஒரு தவறான சந்தர்பத்தில் வன்னியன் தன் பதிவை எழுதியதாகவே நினைக்கிறேன். மற்றபடி வன்னியன் எழுதிய பதிவின் கருத்துக்களை அப்படியே ஏற்கிறேன். வந்தியதேவன் 'கரிசனமாக' இந்த பிரச்சனையில் எழுப்பியவைகளை கூட(தீர்வுகள் தவிர்த்து) அப்படியே ஏற்கிறேன்.

மீண்டும் பிறகு பார்ப்போம்! எனக்கு தெரிந்து இதுவரை இந்த பிரச்சனை குறித்த சுட்டிகள் வரிசைப்படி கீழே.

இன்னும் எத்தனை காலம்தான்...??!! -1

இன்னும் எத்தனை காலம்தான்..! -2


வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-1

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!-1


வந்தியத்தேவனின் சில நேரங்களில் சில மனிதர்கள்-2

சில நேரங்களில் சில மனிதர்கள்-3

சில நேரங்களில் சில மனிதர்கள்-4

சில நேரங்களில் சில மனிதர்கள்-5

எனது எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்-2.

வந்தியத்தேவனின் விவாதக் கூ(கு)த்துகள்-1

விவாதக் கூ(கு)த்துகள் - 2

வன்னியன் எழுதிய தமிழக - ஈழ மீனவர் பிரச்சினை பற்றிய பதிவு

Wednesday, April 05, 2006

எல்லா நேரங்களிலும் சில மனிதர்கள்!

வந்தியத்தேவன் எனக்கு எழுதிய எதிர்வினைக்கான முடிந்தவரையிலான இப்போதய மறுமொழி இது. அதற்குள் இரண்டாவது பதிவு எழுதியுள்ளார். இவ்வளவு வேகமாய் என்னால் செயல்பட முடியவில்லை. அதை இனிதான் நிதானமாய் படிக்க வேண்டும்.

மீனவர்கள் மீது நிகழ்ந்த தாக்குதலால் (அல்லது இந்நாள் வரை தொடர்ந்து வரும் தாக்குதல்களால்) உந்தப் பெற்று, வந்திய தேவன் பதிவு எழுத வரவில்லை என்பது, வந்தியத்தேவன் உட்பட அவர் பதிவை படிக்கும் அனைவருக்கும் தெரியும் வகையிலே, அவரது பதிவே எழுதப்பட்டுள்ளது. அவர் பதிலளிக்கும் விதத்திலிருந்தே தெளிவாக, இந்திய கடற்படை மற்றும் இந்திய தேசியம் பற்றி காட்டமாய் நான் எழுதியதற்கும், 'இந்திய குடிமகன்களை காக்க ஏன் இத்தனை பெரிய படைக்கு வக்கு இல்லை? கண்டதற்கும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள் ஏன் இந்த பிரச்சனை குறித்து மௌனமாய் இருக்கிறார்கள்?' என்கிற விதத்தில் சில கேள்விகளை, தடித்த உடைகளை தாண்டி சிலருக்கு உள்ளே கொஞ்சம் உறைக்கும் வண்ணம், கேட்டதற்கு பதிலாகவே அவருடைய பதில் வந்துள்ளது.

மீண்டும் சொல்வதானால் என் பதிவிற்கு எதிர்வினை என்ற வகையிலாவது, வேறு எதனனலேயோ உந்தப்பட்டு, 'மீனவர் பிரச்சனைகள்' குறித்து பல பதிவுகளில் வந்தியத்தேவனுக்கு எழுதும் கட்டாயம் நேர்ந்ததும் நல்ல அறிகுறிதான். அடுத்து, முன்பொருமுறை வந்தியதேவனை ஒரு வசைவார்த்தையால் திட்டியதை, இந்த பிரச்சனையுடன் இணைத்து, தொடர்பில்லாத விஷயங்களை தொடர்பு படுத்திப் பேசும் ஒரு அசிங்கமான உத்தியில் அவர் ஈடுபாடாததை இங்கே குறிப்பிட்டு, அவரது ஆரோக்கியமான விவாத மனப்பான்மைக்கான ஒரு அடையாளமாக அதை எடுத்து கொண்டு, மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். பின்வரும் அனைத்தும் அவர் எழுதியதை முன்வைத்த மறுமொழிகள் மட்டுமே. மேற்கோள் குறிகளுக்கு இடையில், இதாலிக்கில் அவர் எழுதியதை தருகிறேன்.

முதலில் அவர் பங்களாதேஷ் விவகாரம் பற்றிய முன்னுரையுடன் தொடங்குவது பற்றி இப்போதைக்கு சொல்ல எதுவும் இல்லை. பின்னர் அவர் எழுதுவதாக உள்ள பதிவுகளில், இந்திய மீனவர்கள் பிரச்சனையையும் கச்சத் தீவைவையும், பங்களாதேஷ் பிரச்சனையையும், ஒப்பிட்டு கலந்தடித்து, சில சால்ஜாப்புகளை சொல்வது, அவர் நோக்கம் என்பதாக நான் நினைக்கிறேன். அப்படி நேர்ந்தால், அந்த சந்தர்ப்பத்தில் அதை பற்றி பேசவேண்டிய தேவை நேரலாம். மற்றபடி இப்போதைக்கு இது பேசப்படும் பிரச்சனையுடன் தொடர்பில்லாதது.

டெகான் கொரோனிகிளில் செய்தியை காலையில் படித்துவிட்டு, பதிவிற்கு சுட்டி தரும் நோக்கத்தில், இந்து பத்திரிகையில் தேடி பார்த்து, சுட்டி கிடைக்காததை பற்றி எழுதியிருந்தேன். என்னளவில் தேடிப்பார்த்து, என் கண்களில் படாததையும், ஒருவேளை மீறி வந்திருந்தால் மன்னிக்கவேண்டும் என்று சொல்லி, அவரவர் மனதிற்கு பட்டதை தங்கள் அரசியல் அகராதிப்படி கற்பித்துகொள்ளக் கேட்டுகொண்டு விட்டு, இந்து செய்தி வெளியிடாததற்கு எந்த உள்நோக்கத்தையும் கற்பிக்காமலேயே தொடர்ந்திருந்தேன். "ஹிந்து பத்திரிக்கையை பினாயில் ஊற்றி தேடிப்படிக்கும் ரோஸாவசந்திற்கான' செய்தியாய் வந்தியத்தேவன் தேடி தருவது என்னவெனில், (நான் ஏற்கனவே படித்திருந்த) 2003இல் ஃப்ரண்ட்லைனில் வந்த ஒரு கட்டுரை. வந்தியத்தேவனின் அறிவை கண்டு அதிசயிக்கத்தான் வேண்டும். அவர் இணையத்தில் தேடி அளித்த இந்த பதிலுக்காக அல்ல. எதை நோக்கமாக வைத்து ஃப்ரண்ட்லைன் கட்டுரை எழுதிபட்டதோ, அதே கரணத்திற்காக அவரும் தேடி, சரியாய் மூன்று வருடத்திற்கு முந்தய ஃப்ரண்ட் லைன் கட்டுரையை எடுத்துப் போடும் அறிவுக் கூர்மைக்குத்தான்.

ஹிந்துவின் கணக்குப் படியே, 20 ஆண்டுகளில், 112 மீனவர்கள் இலங்கைப் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது குறித்து கட்டுரை எதையும் எழுதாத , போனவாரம் நடந்த தாக்குதல் பற்றி சின்னதாய் செய்தி தரக் கூட துப்பில்லாத ஃப்ரண்டலைன் இந்து கும்பலுக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீது ஈழத்தமிழ் மீனவர்கள் தாக்குதலிட்டதும், அந்த மோதலை வைத்து கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்னவென்று, இந்துவில் வரும் செய்திகளின் பிண்ணணி அறிந்த, எந்த சுய நினைவுடைய வாசகனுக்கும் புரியும். அதுவே வந்தியத்தேவனையும் ரொம்ப சாமர்த்தியமாய் எழுத வைக்கிறது. 3 + 5, மார்ச், 2003, செய்திகளை எடுத்துப் போடுகிறார்.

"மார்ச் 2003: பெசாலை மற்றும் நெடுந்தீவைச் சேர்ந்த இலங்கைவாழ் தமிழ் மீனவர்கள், கச்சத்தீவினுக்கருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 154 இந்திய மீனவர்களைத் தாக்கி 21 படகுகளைக் கைப்பற்றினார்கள். தாக்கியவர்கள் வேறு யாருமில்லை. மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்தில் அகதிகளாய் 19 வருடங்கள் இருந்துவிட்டு, புலிகள் + இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் போட்டவுடன் மீண்டும் மீன் பிடிப்பை தொடங்கியவர்கள். இப்போது அவர்கள் போட்டியாய் நினைத்தது தமிழக மீனவர்களை. இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியும். ஆனால் முன்னாள் இரத்த சொந்தங்கள் தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?"

இதில் என்ன எழவு நியாயம் வேண்டியிருக்கிறது? தூத்துக்குடியில் இரண்டு பகுதிகளில் உள்ள மீனவர்கள் கூட, தங்களுக்கு, தொழில்ரீதியாய் பங்கம் வந்தால், வெட்டுக் குத்து சண்டையில் ஈடுபடுவார்கள். முந்தய வரியில் ' மண்டபம் மற்றும் நாகப்பட்டினத்து அகதிகள்' என்றும் அடுத்த வரியில் 'முன்னாள் ரத்தபந்தங்கள்' என்றும் எழுதி, இவர்கள் 'தாக்குவதை எப்படி நியாயம் செய்வது?' என்று கேட்பதன் பின்னுள்ள தர்க்கம் என்ன? தொழில்ரீதியாய் தாங்கள் பாதிக்கப் படுவதை முன்வைத்து, தங்கள் நலன் சார்ந்து, இரு குழுவினர்கள் போடும் சண்டையை, ஒரு ஆதாரமாய் காட்டி, நிராதரவான மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குவதையும், அது குறித்து எதுவும் செய்ய வக்கில்லாமல் இந்தியாவும் அதன் கடற்படையும் இருப்பதையும் நியாயபடுத்த, இந்த ஒரு செய்தியை வந்தியத்தேவனுக்கு எடுத்துப் போடவேண்டியிருக்கிறது.

நான் எழுதியது போன வாரம் நடந்த ஒரு நிகழ்வின் அடிப்படையில் ஒரு பதிவு. மீனவர்களின் எல்லா பிரச்சனைகள் பற்றி ஆராய்வதும், விவாதிப்பதும் அதன் அப்போதய நோக்கம் இல்லை. வந்தியத்தேவன் ரொம்ப அறிவுபூர்வமாய் அணுகுவது போன்ற பாவனை செய்து, நான் 'சொல்வது போல்' இது வெறும் இலங்கை ராணுவம் மட்டுமே இந்திய மீனவர்களைக் தாக்கும்' பிரச்சனை அல்லவென்றும், ஈழதமிழர்களும் தாக்குகிறார்கள் என்று முடிச்சு போடுகிறார். அது சரி, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டது போல், எத்தனை முறை ஈழத்தமிழ்ர்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்குள் என்ன மோதல் இருந்தது/இருக்கிறது என்பதை இந்த 2003, மார்ச் நிகழ்வை தவிர வேறு எதையாவது ஆதாரம் காட்டமுடியுமா? பல காலத்திற்கு ஈழத்தமிழ் மீனவர்கள் மீன்பிடிக்க, சிங்கள் அரசின் தடை இருந்ததால், அந்த தடை நீங்கி அவ்ர்கள் மீன் பிடிக்க தொடங்கியபோது, அந்த இடத்தில் தமிழக மீனவர்களும் மீன் பிடிக்கப் போனால் போட்டியாகத்தான் நினைப்பார்கள். இதில் என்ன மனித இயற்கைக்கு, அதன் நியாயத்திற்கு முரணாக நடக்கிறது. ஏற்கனவே சொன்னது போல் உள்ளுரில் இரண்டு குழுக்களிடையே போட்டி ஏற்பட்டாலும், இப்படிபட்ட சண்டைகளில் முடியவே வாய்ப்புக்கள் அதிகம்.

ஆனால் வந்தியத்தேவனுக்கு 'இலங்கை இராணுவம் தாக்குகின்றது என்றால் "அதன்" நோக்கங்களை யாரும் கற்பிதம் செய்து கொள்ள முடியுமாம்'. எப்படி அய்யா கற்பிதம் செய்கிறார்? அது என்ன நோக்கம், அதற்கு என்ன நியாயம்? எழுதி தொலைத்திருக்க வேண்டியதுதானே!

இவர் ஈழத்து மீனவர்களை முன்வைத்து தர்கிப்பது போல், இது என்ன தமிழகத்து மீனவர்களுக்கும், இலங்கையின் தமிழ்/சிங்கள் மீனவர்களின் தொழில் போட்டியினால் ஏற்படும் தாக்குதலா? இவ்வாறு சிங்களப் படை தமிழ் மீனவர்களை தாக்குவதை, ஒரு பொருளாதார பிரச்சனையாய், தொழிற் போட்டியாய் பிரச்சனையை திரித்து, சிங்களப் படையின் தாக்குதலையும், இந்தியாவின் உயிர் பறிக்கும் மௌனத்தையும் எடுத்த எடுப்பிலேயே திசை திருப்புவதிலேயே இவரின் யோக்கியதை தெரிந்துவிடுகிறது.

இவ்வாறு ஃப்ரண்ட்லைன் 2003 கட்டுரையை எடுத்துப் போட்டு, புத்திசாலித்தனமாய் பேசியவர், அடுத்த பத்திகளில் முட்டாளாகிறார். வலிந்து தன் தரப்பை நிறுவ, கையில் கிடைக்கும் எல்லா தர்க்க அஸ்திரங்களையும் பயன்படுத்த நேரும் போது, இப்படி முட்டாளாவது இயல்பானதுதான்.

"கடற்பாதுகாப்பு என்பது இந்திய கடற்படையும், கடற்கரை பாதுகாப்புப் படையும் (Indian Coast Guard) இணைந்து, இயைந்து செயல்படுத்தும் பணியாகும். இப்படைகளை இயக்கும் கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க இயலாது. ரோந்திற்கு செல்லும்போது, இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை தன் "உறுப்பை" நுழைத்தாலும், ரோஸாவசந்த் கூறுவது போல "தன்னிச்சையாய்" குறியை அறுக்க முடியாது என்பது கசப்பான ஜனநாயக உண்மை. இந்திய அரசின் வெளிப்படையான "உத்தரவின்றி" இராணுவமோ, விமானப்படையோ, கடற்படையோ, கடற்பாதுகாப்புப் படையோ ஏனைய மத்திய பாதுகாப்புப் படைகளோ ஒன்றுமே செய்யாது. தன்னிச்சையாக முடிவெடுக்க இந்தியாவின் படைகளுக்கு ஜனநாயகமில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதே அப்படைகளின் சிறப்பு. அவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகளா என்று ரோஸா கேட்பது நல்ல நகைச்சுவை. அங்கதம்/நகைச்சுவை' பிரிவில் அவர் தனது பதிவை தேன்கூடில் பதிவு செய்து கொள்ளலாம்."

'நான் சொல்வது எல்லாம் உண்மை' என்று தொடங்கி சாட்சி சொல்லிவிட்ட ஒரே காரணத்தினால் எந்த சாட்சியும் உண்மையாகிவிடாது என்பது போல், 'நல்ல ஜோக்' என்று வந்தியத்தேவன் சும்மா சொன்னதனால் மட்டும் எதுவும் நகைப்பிற்குரியதாகிவிடாது. வந்தியதேவனிடம் குறைந்த பட்ச சுய நினைவு இருந்தால், தான் அடுத்த பத்தியில், எனக்கு பதிலாக எழுதியிருப்பதை , மனதில் வைத்துக் கொண்டாவது அறிவுபூர்வமாய் எழுத முயற்சித்திருப்பார். அகதிகளாய், நிர்கதியாய் வரும் ஈழத்தமிழர்களை, நடுக்கடல் மணல் திட்டில் தவிக்க விடுவதற்கு மட்டும், அது குறித்து ஸ்டேட்மெண்ட் விட மட்டும் கமாண்டருக்கு எங்கேயிருந்து ஆணை வருகிறது? புலிகளின் கப்பல் ஆயுதம் சுமந்து போனால் மட்டும், எப்படி துரிதமாய் செயல்பட்டு தாக்குதலிட்டு அழிக்கவோ, சுற்றி வளைத்து கைது செய்யவோ முடிகிறது? பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, அதன் குடிமகன்கள் மீது தாக்குதல் நடத்தினால், (கிடைக்க நாட்கணக்கில் ஆகும் அல்லது கிடைக்கவே கிடைக்காத)தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதி அரசின் அனுமதி பெற்று, அவர்கள் தாக்கிவிட்டு, தங்கள் எல்லைக்குள் திரும்பிவிட அனுமதித்து கொண்டிருக்குமா? இந்த ஜனநாயகக் கடமை கடலுக்கு மட்டும்தானா, விண்வெளிக்குமா? என்ன கேனத்தனமான உளரல்? சால்ஜாப்பு சொல்லவும் ஒரு விவஸ்த்தை வேண்டாமா? ஒரு அந்நிய நாட்டுப்படை தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தி விட்டு செல்கிறது, இதற்கு முன்பும் பலமுறை செய்திருக்கிறது. ஒருமுறை கடற்கரை வீடுகளில் குண்டு பதிக்குமளவிற்கு அத்துமீறுகிறது. மைய அரசின் 'வெளிப்படையான அனுமதி' பெற்றுத்தான் இந்திய கடற்படை செயல்படுமாம். பாகிஸ்தான் எல்லையிலும் இப்படித்தான் நடக்கிறது.

அந்த லோக்கல் கமாண்டருக்கு முடிவெடுக்க அதிகாரம் இருக்கிறது, இல்லாமல் போகிறது, அது குறித்து யாருக்கு என்ன கவலை? அந்நிய நாட்டுப்படை உறுப்பை நுழைத்தது பற்றி மைய அரசு என்ன அலட்டிக் கொண்டது என்பதுதான் கேள்வி. உறுப்பை நுழைத்து, காரியமாற்றிவிட்டு திரும்பிய பிறகும் என்ன அலட்டிக் கொண்டது? அது குறித்து என்ன கண்டனம் தெரிவித்தது? எதிர்வினையாய் என்ன எதிர்கால நடவடிக்கை எடுக்கப் பட்டது? என்பதெல்லாம்தாம் நான் எழுதியதன் உள்ளிருக்கும் கேள்வி. எல்லாவற்றிற்கும் சும்மா 'அங்கதம்/நகைச்சுவை பிரிவில் பதிவு செஞ்சுக்கோ!' என்று சொல்லிவிட்டு, கேனதனமாய் பதில் எழுதினால் ஆச்சா?

அடுத்து 'முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்?' என்று தொடங்கி நான் கேட்டதற்கான அவரின் பதிலுக்கு வருவோம்.

"GPS (Global Positioning Syatem) இல்லாமலேயே ஆதிக்காலத்திலிருந்து கடற்வலம் வந்தவன் தமிழன். "அறியாமல்" அடுத்தவரின் கடலெல்லைக்குள் நுழைந்த சாதாரணப் படகுகள் என்று சால்ஜாப்பு வேண்டாம். நுழைந்தது சாதாரணப் படகுகள் கிடையாது. அவை Trawlers எனப்படும் ஆழ்கடல் விசைப்படகுகள். மேலும் இராமேஸ்வரத்திலிருந்து 18 கிமீ தூரத்திலிருக்கும் கச்சத்தீவிற்கு சாதாரண மோட்டார் பொருத்திய படகுகளைவிட ஆழ்கடல் விசைப் படகுகளே அதிகம் செல்லுகின்றன. அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்."

கேள்விக்கும் பதிலுக்குமான உறவை உன்னிப்பாக கவனிக்காவிட்டால், வாசிப்பை எங்கே வேண்டுமானலும் கடத்த கூடியவர்கள், இந்த வந்தியத்தேவனை போன்றவர்கள். அவர் தேர்ந்தெடுத்த வரியையும் சேர்த்து நான் எழுதியுள்ளது கீழே.

//இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்? தவறி போனவர்களை (அல்லது இந்தி(ரா)யாவால் தாரை வார்க்கப் பட்ட, இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று போனவர்களை) கைது செய்வது, நடைமுறையாக இருக்கலாம். தாக்குதல் நடத்தவும், சுட்டு கொல்லவும், அதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இதையே வழமையாய் செய்வதையும், இந்தியா அனுமதிப்பதும்......//

ஒரு நேர்மறையான வாசிப்பை நிகழ்தும் யாருக்கும் நான் எழுதியதன் அடிப்படை கேள்விகள் புரியாமல் இருக்காது. 'இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று' (தெரிந்தோ, வேண்டுமென்றே திட்டமிட்டோ) போயிருந்தாலும் கூட, கைது செய்வது நடைமுறையாக இருக்கலாம். சுட்டு கொல்வதும், அதை தொடர்ந்து 20 வருடமாய் செய்து வருவதையும், அதை இந்தியா என்ற பெரியண்ணன் அனுமதிப்பதும் என்ன நியாயம் என்பதுதான் பின்னிருக்கும் கேள்வி. அதற்கு பதில் சொல்லாமல், ஒரு வரியை எடுத்து ஒட்டி, அவர்கள் போனது சாதாரணப் படகு அல்ல, Trawlers என்று ஏதோ விவரபூர்வமாய் பேசுவதன் அறிவுநேர்மையை மெச்சத்தான் வேண்டும்.

இங்கே இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும். இரண்டாவதற்கு பிறகு வருவோம். முதலாவது வந்தியத்தேவன் 'தர்க்கம் செய்வது' என்ற அளவில் எடுக்கும் சார்பு நிலை மற்றும் அதன் மூலம் அவர் நியாயப் படுத்தும் தரப்பு. இரண்டையும் அவர் இலங்கை கடற்படையின் தரப்பு சார்ந்து எழுதியுள்ளதுதான் மேலே உள்ள வரிகள். அதாவது இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதலிட முகாந்திரமாய் இருக்கும் வாதங்கள். நாம் எந்த தரப்பின் பக்கம் முன்னமே தீர்மனித்துவிட்டு பேசத் தொடங்குகிறோமோ, அதனடிப்படியில்தான் வாதங்கள் வந்து விழும். அதற்கேற்ப அடுத்தவர் எழுதியதை திரிப்பதும், தேர்ந்தெடுத்து வெட்டி ஒட்டுவதும் நிகழும். இடையில் பரிசீலனை செய்ய, கொஞ்சம் திறந்த மனதாவது வேண்டும்.

எனக்கு ராமேஸ்ரத்து மீனவர்கள் எந்த வகை படகில் சென்றார்கள் என்றும், trawlers படகுகளில் சென்றால் எல்லலயை பிரித்து அறியமுடியுமா என்பதும் தெரியாதுதான். செய்திகளின் அடிப்படையிலேயே பேசுகிறேன். இதற்கு முன் படித்த கட்டுரைகளில், செய்திகளில் கடலில் கடற்பரப்பை பிரித்து அறிவது கடினம் என்று படித்ததில்தான் எழுதினேன். மீனவர்கள் பலமுறை செய்திகளில், அப்படி ஒரு பிரச்சனை இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். பாதிக்கப் பட்ட அவர்கள் சொல்வது பொய், சிங்கள கடற்படையின் செயலுக்கும், இந்தியாவின் மௌனத்திற்கும் வக்காலத்து வாங்கும், வந்தியத்தேவன் சொல்வது மட்டும் உண்மை என்று எடுத்துகொள்வது ரொம்ப அதிகபட்சமாக எனக்கு இருக்கும். ஆனாலும் வேண்டுமென்றேதான் - சிங்களப் படையினாரால் தாங்கள் கொல்லப் பட கூடிய அபாயம் இருந்தும்- இலங்கை கடற்பரப்பிற்கு தமிழகத்து மீனவர்கள் சென்றார்கள் என்று, வந்தியத்தேவன் ஆதாரம் காட்டினால் ஒப்புகொள்வதில் பிரச்சனையில்லை. ஆனால் மேலே சொன்னது போல் நான் எழுப்பிய பிரச்சனை அதுவல்ல.

மேலும் வந்தியத்தேவன் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறார் அல்லது என்ன பேசுகிறார் என்று எனக்கு சரியாய் புரியவில்லைதான். அவர் ஆதாரம் காட்டும் ஃப்ரண்ட் லைன் 2003 கட்டுரையில், ஈழத்து மீனவர்களிடன் தகறாறு வலித்தவர்கள் Trawler படகில் சென்றதாய் குறிப்பிடப் படுகிறது. எல்லா முறையும் , இன்றுவரை, *குறிப்பாய் கடந்த வாரம்*, இருக்கும் அத்தனை மீனவர்களும் இப்படி நவீனப் படகுகளில்தான் -அதுவும் ட்சுனாமி பேரழிவிற்கு பிறகு- செல்கிறார்களா? கடந்த வாரம் அவர்கள் 300 (எண்ணிக்கை பத்திரிகைகளில்) Trawlers படகுகளில்தான் சென்றார்கள் என்று எதன் மூலம் வந்தியா முடிவெடுக்கிறார் என்று தெரியவில்லை. நான் படித்த செய்தியில் அப்படி எதுவும் இல்லை. தூத்துக்குடி என்ற மீனவ நகரில் இருந்த அனுபவத்தில், மீன் பிடி தொழிலில் பலதரப்பட்ட வர்க்கங்கள் இருப்பதை உணர முடிந்திருக்கிறது. கோடி கோடியாய் சம்பாதிப்பவ்ர்களும், அடுத்த நாள் (சாதாரண)வள்ளத்தில் சென்றாலே நாளை கடத்த முடியும் என்ற நிலையிலும், எல்லா தரப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரே வகை நவீன படகுகளில் போய் மீன் கொள்ளை அடிப்பதாக, வந்தியத்தேவன் சொல்வதை, குறைந்த பட்சம் அவரது தர்க்க யோக்கியதையை கணக்கில் கொண்டாவது என்னால் அப்படியே ஏற்றுகொள்ள முடியவில்லை.

ஆனால் வந்தியதேவன் முன்வைக்கும் வாதத்தின் அயோக்கியத்தனம் என்னவெனில், அது இதுவரை இலங்கை படையினரால் சுடப்பட்ட அத்தனை மீனவர்களும், இலங்கை கடற்பரப்பில் போய் கொள்ளையடித்தார்கள் என்று சொல்லி, அதனால் அவர்களுக்கு நேர்ந்ததை நியாயப்படுத்தும் தர்க்கத்தை முன்வைப்பது. ஆனால் பலமுறை இந்திய எல்லையிலேயே தாக்குதல் நடந்துள்ளது என்றே ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை இந்திய எல்லைக்குள் புகுந்து, கடற்கரை வரை துரத்தியதற்கும் அவரிடம், நமது கடற்படையின் ஜனநாயக கடப்பாடு என்ற கேனத்தனமன வாதத்தை தவிர வேறு நியாயங்கள் கிடையாது.

இரண்டாவது விஷய்ம் என்னவெனில், ஒரு பக்கம் இந்திய தேசியம் என்பதை தூக்கிபிடித்து அதற்காக என்னவகை வாதங்களையும் முன்வைப்பவர், இவர் நம்பும் வரையரைக்குள் வராதவர்களை மோசமாய் சித்தரிப்பவர், 'அவ்வகை விசைப்படகுகள் செய்வது "மீன் கொள்ளை" (poaching) என்று இலங்கை மீனவர்கள் கருதுகின்றார்கள்' என்று சொல்லி ரொம்ப யோக்கியமாய், இந்த இடத்தில் மட்டும், இந்திய தேசிய பாசம் மறந்து போய் அல்லது தமிழகத்து மீனவர்கள் இந்தியர்கள் என்பது மறந்து போய், இலங்கை மீனவர்களுக்கு ஆதரவாய் வாதத்தை முன்வைக்கிறார். என்னவானாலும், யார் யாரை கொள்ளையடித்தாலும், எவன் எவன் நாட்டை ஆக்ரமித்தாலும், தன் நாட்டின் நலனை முன்வைத்து பேசுவதுதானே இவர்களை பொறுத்தவரை தேசியம். அதைத்தானே எல்லா இடத்தில் எல்லா தேசியவாதிகளும், இங்கே இவரும் செய்கிறார். இங்கே மட்டும் என்ன நடுநிலை ஹிபாக்ரசி வேண்டியிருக்கிறது!

அடுத்து நான் எழுதியது, 'புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே!'

வந்தியாவின் பதில்: "உங்கள் பிரச்சினை ஜனநாயக முறையில் நடுவண் அரசின் கட்டளைக்கு அடிபணியும் இந்திய இராணுவத்திற்கும், தன்னிச்சையாய்/யதேச்சாதிகாரமாய் முடிவுகளை செயல்படுத்தும் பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை அறியாதன் தன்மையை வெளிக்காட்டுவதாய் தெரிகின்றது."

தலை சுற்றுகிறது. என்னய்யா பதில் இது! 'இந்திய இராணுவத்திற்கும், பாஸிஸ அமைப்பிற்கும் உள்ள வேறுபாடுகளை' வைத்து, நான் கெட்ட கேள்விக்கான பதிலை எப்படி அய்யா புரிந்து கொள்ள முடியும? விவேக் பாணியில் கேட்கவேண்டுமென்றால்' 'ஏம்பா நீ சின்ன வயசிலேர்ந்தே இப்படித்தானா, இல்லே அப்பப்பதான் இப்படி ஆவியா?'

புலிகளின் கப்பலை துரிதமாய் செயல்பட்டு, இடைமறித்து, தாக்குவதை பற்றியோ, தளைபடுத்துவது பற்றியோ நான் எந்த கருத்துமே சொல்லாவிட்டாலும்,அதை திரிப்பதை கூட சும்மாவிடலாம். வந்தி வெட்டி ஒட்டிய ஒருவரி அடங்கிய அந்த பத்தியில் நான் கேட்டது, அதை செய்ய வக்குள்ளவர்கள், இந்திய கடற்பரப்பில் மீனவர்களை கடற்கரை வரை துரத்தும் இலங்கை படையினர், தன் கடற்பரப்பில் காரியமாற்றி விட்டு திருப்ப அனுமதிப்பதும், திரும்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் இல்லாதது பற்றி. அதற்கு பதிலாக ' ஜனநாயகம், பாசிசம்' என்று உளருவதை பார்த்தால், ஆசாமி நார்மல்தானா என்று சந்தேகம் வருகிறது. (நார்மல்தான், ஆனால் தான் நினைப்பதை சாதிக்க விரும்பி, தர்க்க சுயமைதுனம் செய்தால் இப்படி எல்லாம் நேரிடும் என்று தெரியும்.)

(எனக்கு மற்றும் வாசிப்பவருக்கு ஏற்படும் அலுப்பு மட்டுமின்றி, வேறு காரணங்களாலும் இங்கே நிறுத்த வேண்டியிருக்கிறது. வந்தியதேவன் அளவிற்கு என்னால் படுவேகமாய் எழுத முடியாதுதான், மேலும் இதை எவ்வளவு தூரம் தொடர்வது என்பதும் தெளிவில்லை. அதனால் அடுத்தவாரம், வந்தியதேவன் தன் தொடரை முடித்த பின்பு முழுமையாய் பார்க்கலாம். ஒருவேளை முன்னமே எழுதினாலும் எழுதலாம், எழுதாமலே கூட போகலாம்.)

Monday, April 03, 2006

இன்னும் எத்தனை காலம்தான்..!

சிங்களக் கடற்படை ராமேஸ்வரத்து மீனவர்கள் மீது நடத்திய தாக்குதலில், எட்டு மீனவர்களை காணவில்லை என்று செய்தி வந்தது. அவர்கள் என்னவானார்கள், அது குறித்து அறிய முயற்சி, விசாரணை, கவலை கொள்வது என்று எங்காவது நடக்கிறதா என்று அதற்கடுத்த நாட்களில் வந்த செய்திதாள்களின் பக்கங்களிலிருந்து என்னால் அறிய முடியவில்லை. முன்பெல்லாம் சில காலம் முனகல்களுக்கு பின்னர் மறக்கப்பட்டது போல அல்லாமல், இந்த முறை சின்ன முனகல் கூட இல்லாமல் இந்த விஷயம் மறக்கடிக்கப்படும் என்று தோன்றுகிறது.

சிங்களப் படையின் தாக்குதலின் எதிரொலியாய் இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்திருக்கிறது. எப்படியெனில் விசாகப்பட்டினம் அருகில், இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துகொண்டிருந்த இலங்கையை சேர்ந்து ஒன்பது மீனவர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு முன்னாலும் இப்படி நடந்திருக்கலாம் என்றாலும், இப்படிப் பட்ட நடவடிக்கைகளை இப்போதுதான் கேள்விப் படுகிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்கள் உள்ளூர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். சச்சிதானந்தன் மறவன்புலவு அவர்கள் சொல்வதை பார்த்தால், விசாரணை துரிதமாய் முடிந்து அவர்கள் இலங்கைக்கு உடனடையாய் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று தெரிகிறது. (என்ன விசாரிப்பார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லை, குறிப்பாக தமிழர்களே இல்லை என்பதை விசாரணை மூலம் உறுதிப் படுத்திவிட்டு அனுப்பிவிடுவார்கள் போலும்.) இதில் எந்த வித ஆட்சேபணையும் யாருக்கும் இருக்க முடியாது. தமிழகத்து மீனவர்களை போலவே, பொருளாதார பின்புலமும் வாழ்க்கையும் கொண்ட அவர்கள், இந்தியப் படையின் துப்பாக்கிகளுக்கு இலக்காகவேண்டும் என்று யாருக்கும் ஆசையில்லை. எனக்கிருக்கும் கேள்விகள் சென்ற பதிவில் உள்ளவை மட்டுமே.

இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் நுழைவதற்கும், இந்திய கடற்பரப்பில்-சில நேரங்களில் கடற்கரை வரை கூட வந்து- இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை, அங்கே தயாராக இருக்கும் இந்திய கடற்படை எப்படி அனுமதிக்கிறது? இந்த விஷயத்தில் இவ்வளவு சோப்ளாங்கியாய் இருக்கும் இந்திய கடற்படை, மற்ற விஷயங்களில் -புலிகள் கப்பல், ஈழதமிழ் அகதிகள் விஷயங்களில்- அத்தனை திறமையுடையதாகவும் கடுமையானதாகவும் இருக்கிறது? தான் என்ன ஆட்டம் ஆடினாலும் இந்தியா தன்னை எதுவும் செய்யாது என்று இலங்கைக்கு எப்படி இவ்வளவு தைரியம் வருகிறது? இந்த அட்டூழியம் குறித்து, எது எதற்கோ கூக்குரல் இடுபவர்கள் - பத்திரிகை டீவி, அரசியல் கட்சிகள், தொடங்கி வலைப்பதிவுகள் வரை -யாரும் முனகுவது கூட இல்லையே, ஏன்? இதே தளத்தில் இன்னும் பல இயற்கையான கேள்விகளும் உள்ளன.

"இது வடவர்களின், இந்தியப் பார்ப்பனீய 'அரசாங்க இயந்திரத்தின்' ஆதிக்க மனோபாவத்தையும் தமிழைனத்தின் மீதான வெறுப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் கொள்ளத்தான் வேண்டும்" என்று நியோ சொல்வதை மறுக்க எந்த வாதமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஈழதமிழர்கள் என்றால் அவர்கள் வேறு நாட்டினர் என்று ஒரு சால்ஜாப்பையாவது சொல்லமுடியும். இந்திய தமிழன் கேள்வி கேட்பாரின்றி சுடப்படுவதை பற்றி எந்த அதிர்வலையும் இல்லையென்றால் அதை வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்!

இராம.கி அவர்களும் குறிப்பிடுவது போல், இந்த விஷயங்களை பேசுபவர்களை பற்றி முத்திரை குத்தியே இதை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். மீண்டும் இது ஒரு தமிழ் தேசியவாதிகளுக்கும், அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் மட்டுமான ஒரு பிரச்சனையாய் மற்றிவிடுவார்கள். வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் நடந்த, மிக கொடூரமான செயல்களை பற்றி, பேசுபவர்கள் முத்திரை குத்தப் பட்டு, அது ஒரு சிலரின் பெரிதுபடுத்தல்களாகி விட்டது. மைசூரில் எந்த விசாரணயும் இன்றி காலகாலமாய், உரிய ஆதாரமின்றி அடைத்து வைக்கப்படிருந்தவர்களை பற்றி பேசவே இயலவில்லை. ஆனால் பல காலம் கூச்சல் எழுப்பியதால்தான் ஆமை வேகத்திலாவது ஒரு விசாரணையாவது நடந்து, பல அப்பாவி மக்கள் பின்னர் (காலம் கடந்தாகிலும்) விடுதலையாக முடிந்தது. அந்த காரணத்திற்காகவாவது நாம் இது போன்றவற்றில் சோர்வுறாமல் அவ்வப்போது குரலையாவது ஒலிக்க வேண்டும்.

சென்ற பதிவில் வந்த் பின்னூட்டங்களில் இராம. கி அவர்களின் பின்னூட்டத்தையும், மறவன்புலவு சச்சிதானதன் அவர்களின் பழைய பதிவு ஒன்றையும்(கட்டுரையை சுட்டிய நியோவிற்கு நன்றி), அவற்றின் முக்கியத்துவம் கருதி இங்கே பதிவு செய்கிறேன். யாருக்கும் இதில் ஆட்சேபம் இருக்காது என்று நம்புகிறேன். இதுவரை 500 மீனவர்களாவது கொல்லப் பட்டிருப்பார்கள் என்ற என் கருதுகோளிற்கு மாறாக மறவன்புலவின் கட்டுரையில் இரண்டாயிரம் என்று கணக்கு சொல்லப்படுகிறது.



இராம.கி: இந்தியா என்பது பலதேசங்கள் நிறைந்த ஒரு நாடு (multinational country) என்ற கருத்தை இன்றைய அரசியலாரில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை. பேராயம் (congress), பாரதிய சனதா, இன்னும் அந்தக் கால சனதாவின் இந்தக் கால உதிரிக் கட்சிகள் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் எனப் பலவும் (பொதுவுடைமையர் சிலர் வறட்டு வாதம் பேசி இது பற்றி ஓடி வரலாம்.) ஏற்றுக் கொண்டதில்லை. தேசிய இனங்களை முன்னிறுத்தும் திராவிடக் கட்சிகள், அகாலி தளம், அசோம் கண பரிசத் போன்ற கட்சிகளும் ஒரு தெளிவில்லாமல், அதிகாரத்தில் பங்கு கிடைத்தவரை சரி என்றே இருந்து வருகிறார்கள். எல்லாமே வணிக அரசியல் என்று ஆகிவிட்டது. இந்தியா ஒரு தேசியக் குடியரசு (national republic) என்றே இன்றைய நடுவண் அரசு சொல்லிவருகிறது. இந்தியாவின் அதிகார வருக்கம் (bureaucracy) அரசியலாருக்கு அதைத்தான் பாடமாகச் சொல்லி வருகிறது. இவர்களும் அதை உண்மை என்றே நம்பி வருகிறார்கள்.

இந்தச் சிந்தனை மாறாத வரை தமிழ்நாட்டிற்குத் தெற்கே நடக்கும் சிக்கல்களை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாது. கால காலமாய் சிங்கள அரசிற்குச் சார்பாகவே இந்திய அரசு நடந்து வந்திருக்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில் ஈழப் போராளிகள் தமிழ்நாட்டில் வந்து போர்ப் பயிற்சி பெற்றதும் பின் இங்கிருந்து மீண்டும் அங்கே விடுதலைப் போரில் போராடப் போன போதும் நடந்தது ஒரு புறனடையாகத் (exeception) தோன்றியது; அவ்வளவுதான். உண்மையில், இவர்கள் இந்திய அரசிற்குக் கூலிப் படையாக இருப்பார்கள் என்றே இந்திய அரசாங்கம் நினைத்தது. அதனால் தான் ஆதரவும் பயிற்சியும் கொடுத்தது. ஆனால் போராளிகள் தங்களுக்கென்று சொந்தச் சிந்தனை உண்டு என்ற வகையில் இந்தியத் தடந்தகை(strategy)க்கு உடன்படாமல் போனார்கள். பின்னால் நிலைமை மாறி இந்தியப் பெரும்படையே ஈழப் போராளிகளோடு போரிடும் நிலை ஏற்பட்டது.

இப்படி நடந்து சூடு கண்ட காரணத்தால், இந்திய அரசு, இன்றைய நிலையில் சிங்களப் பேரினவாதத்திற்குச் சார்பாகவே நிலையெடுக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதில் நாற்பது என்ன நாலாயிரம் இந்திய மீனவர்கள் இறந்தாலும் இந்திய அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளாது. இந்திய அரசின் தடந்தகை தன்னைச் சார்ந்தது; தன்னுடைய கடற்புறத்தில், அதாவது அரபிக் கடலில் குசராத் தொடங்கி, சுற்றிவந்து இந்துமாக் கடலும், பின் கிழக்கில் வங்கக் கடலில் வங்காளம் வரைக்கும் வல்லரசுகள் யாரும் வந்துவிடாவண்ணம் வல்லாண்மை காட்டுகிறது; அந்தத் தடந்தகையில் அருகில் உள்ள நாடுகள் யாரும் தன்னோடு முரண்பட்டு தனக்குப் பகைநிலை எடுத்துவிடக் கூடாது; அப்படி எடுத்தால் அதில் அமெரிக்காக்காரன் வந்து உட்கார்ந்து கொள்ளுவான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சிங்கள அரசின் கப்பற்படையோடு இந்தியக் கப்பற்படை சண்டைக்குப் போனால், சிங்கள அரசு உறுதியாக அமெரிக்கா, பாக்கிஸ்தான் என்று ஒரு வகை ஆழமான உறவில் போய்விடும் (இப்பொழுது அவர்களுக்கு இடையே இருப்பது ஒரு ஆழமில்லாத உறவே) என்ற ஒரே சிந்தனையில் தான் சிங்கள அரசை இந்திய அரசு எதிர்ப்பதும் இல்லை; ஈழம் மலர்வதை விழைவதும் இல்லை; கச்சத்தீவைப் பெறுவதும் இல்லை; தமிழ்நாட்டு மீனவர் அவ்வப்பொழுது சுடப்படுவதையும், படகுகளை வாரிக் கொண்டு போவதையும், அவ்வப்போது மீனவரைப் பிடித்து மன்னாருக்குக் கொண்டுபோய் அலைக்கழித்து ஆறுமாதம், ஓராண்டு கழித்து விடுவதையும் கண்டுகொள்ளவும் இல்லை.

பொதுவாக, இந்திய நாடு விடுதலையானதில் இருந்து நடந்துவரும் நிகழ்வுகளை தடந்தகைக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலை புலப்படும். கென்யாவில், உகாண்டாவில், சாம்பியாவில் குசராத்திகள் போன்றோர் அடிபட்டால் இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்கும், பர்மாவில், மலேசியாவில், இலங்கையில் தமிழர் அடிபட்டால் இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்டதில்லை; சும்மா பேருக்கு ஏதேனும் செய்யும்; பின்னால் தன் வேலையை நிறுத்திக் கொண்டுவிடும். இவற்றை எல்லாம் எழுதப் போனால், சொல்பவனைக் குறுகல் புத்தி என்று சாடுபவர்கள் தான் மிகுந்து நிற்பார்கள். தமிழன் ஏமாளியானது பல்லாண்டு கால வரலாறு. இப்பொழுது நீங்கள் அந்தப் புலனத்தை மீண்டும் எடுக்கிறீர்கள்.

என் கோவமெல்லாம் நடுவண் அரசின் அரசியலாரிடமோ, அதிகார வருக்கத்திடமோ கிடையாது; நமக்கென்று வாய்த்திருக்கிறார்களே ஒரு சில தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தான். உள்ளே கிடக்கும் முரண்பாடுகளைத் தீர்க்காமல், இந்தக் குமுகாயத்தை அணிதிரட்டாமல் வெளிமுரண்பாடுகளைப் பற்றித் தமிழ்க் குமுகாயம் பேசி என்ன பலன்?

மீனவர்களுக்காக வருந்தத்தான் முடியும்.


சிங்கள மீனவருக்கு ஒரு நீதி, தமிழ் மீனவருக்கு ஒரு நீதியா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மனைவி முத்துலட்சுமியையும், கண்மணிகளான நான்கு குழந்தைகளையும் கையறு நிலையில் விட்டுவிட்டு, நாற்பது வயதான இராமு கடலில் உயிர்நீத்தார்.இராமுவின் உயிரைக் குடித்த இலங்கைக் கடற்படையின் துப்பாக்கி ரவைகள், கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழக மீனவர்களின் உயிர்களையும் குடித்து வந்துள. அந்த நீண்ட பட்டியலில் இராமுவின் பெயர் இறுதியானதல்ல. இன்னமும் சில ஆயிரம் தமிழக மீனவர்களைப் பறவைகளைச் சுடுவது போல் கடற்பரப்பில் வைத்துச் சுட்டுக் கொல்ல இலங்கைக் கடற்படை அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.இராமுவுக்குக் கடலைத் தெரியும், மீன் வகைகளைத் தெரியும், படகுகளை ஓட்டத் தெரியும், நீச்சல் தெரியும், வலைகளின் கண் அளவுகள் தெரியும், மிதப்புக் கட்டைகளை வலைகளில் பொருத்தத் தெரியும்; எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த ஆழத்தில் எந்தவித வலையை எந்தக் கண்ணளவில் பயன்படுத்தினால் எவ்வெவ்வகை மீன்களைப் பிடிக்கலாம் என்ற பட்டறிவும், தொழில் நுட்பமும் நன்றாகவே தெரியும்.பகலிலோ, இரவிலோ கடற்பரப்பில் திசையை இராமு அறிவார். தனக்கும் தன்துறைக்கும் இடையிட்ட தூரத்தையும் அறிவார். கண் புருவத்துக்கு மேல் கைவிரலை அடுக்கிக் கூர்ந்து பார்த்துத் தொலைவில் தெரியும் நிலத்தின் கரையோரத்தையும், கரையிலுள்ள கலங்கரை விளக்கங்களையும், கடற்பரப்பில் மிதக்கும் படகுக் கூட்டங்களையும் எளிதில் கண்டறிவார்.ஆனால் கடலின் நடுவே இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கின்ற கற்பனைக் கோட்டை அவரால் கண்டுபிடிக்க முடியாது. அவர் மட்டுமல்ல, பாக்குநீரினையின் எதிரெதிர் கரைகளில் வாழும் அவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கானத் தமிழ் மீனவர் எவராலும் துல்லியமான இந்திய இலங்கை எல்லைக் கோட்டைக் கணிக்கவோ, கண்டுபிடிக்கவோ முடியாது.இந்தக் கற்பனைக்கோட்டுக்குரிய வரைபடங்கள் இந்தியஇலங்கை நிலஅளவையாரிடம் இருக்கின்றன. வேறு எந்த வழிகாட்டியும் எவரிடமும் இல்லை!தனுஷ்கோடி தொடக்கம் நாகப்பட்டினம் வரை இருநூற்றைம்பது கிமீ. நீண்ட தமிழகத்தின் கரையோரமெங்கும் பல இலட்சக்கணக்கான மீனவர்கள், நூற்றுக்கும் அதிகமான ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் ஊர்களில் உள்ள எவருக்குமே இப்படியான ஒரு கற்பனைக்கோடு உள்ளதென்பதையோ, ஊர்க்கரையில் இருந்து இவ்வளவு தொலைவில் அக்கோடு உள்ளதென்பதையோ, இக்கோட்டுக்கு அப்பால் இலங்கைக் கடல்பகுதி என்பதையோ விளக்கி விவரிக்கும் வரைபடங்களோ, துண்டு வெளியீடுகளோ, சுவரொட்டிகளோ, நிலையான பட அமைப்புகளோ, அறிவிப்புகளோ தரப்படவில்லை.விடுதலை பெற்ற காலத்தில் நூற்றுக்கு பதினைந்து பேர் எழுத்தறிவு பெற்ற நிலைமாறி, இந்தக் கடலோரச் சிற்×ர்களில் நூற்றுக்கு எழுபத்தைந்து அல்லது எண்பது பேர் எழுத்தறிவு பெற்றவராக மாறியுள்ளனர். எல்லைக் கோடு பற்றிய தகவலைச் சொன்னால், அதுவும் உரிய படங்களைக் காட்டிச் சொன்னால் புரிந்து, அறிந்து கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள்.இலங்கைக் கடற்படை சுட்டதால் ஒவ்வொரு ஊரிலும் ஆகக் குறைந்தது இருவராவது பலியாகி இருப்பார். இவர்கள் எவருக்குமே எந்தக் காலத்திலும் பாக்கு நீரிணையில் உள்ள இந்திய இலங்கைக் கடல்எல்லைப் பற்றிய அறிவை யாரும் ஊட்டவில்லை.பாக்குநீரிணையின் கிழக்குக் கரையோரத்தில் பரந்து வாழ்ந்த மீனவர் சமுதாயம், இலங்கை அரசின் கொடுமையான நடவடிக்கைகளால் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக அவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையைத்தானும் இலங்கைக் கடற்படை வழங்க மறுத்து வருகிறது. பலர் தொழிலையே விட்டுவிட்டார்கள். சிலர் தமிழகக் கரைகளுக்கு வந்து தமிழக மீனவர்களுடன் சேர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.பாக்குநீரிணைக்குத் தெற்கே மன்னார்க் குடாவின் தென்கிழக்குக் கோடியில் இலங்கைக் கரையோரமெங்கும் சிங்கள மீனவர்கள் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். எவ்விதத் தடையுமின்றி மீன் பிடித்து வருகிறார்கள். சில காலங்களில் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்தும் மீன் பிடிக்கிறார்கள்.கடந்த ஜூன் இரண்டாம் தேதி புதன்கிழமை மதியம் ஒரு மணிக்கு, கொழும்புக்கு வடக்கே நீர்கொழும்பிலிருந்தும், மாவனல்லையிலிருந்தும் மூன்று படகுகளில் மீன் பிடிக்கப் புறப்பட்ட பதினைந்து மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அவர்களை இரவு எட்டுமணியளவில் இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்தது. மூன்று படகுகளையும் கட்டி இழுத்துக் கொண்டு இராமேஸ்வரம் நோக்கி வந்தது.இதைக் கண்ட ஏனைய சிங்களவரின் மீனவப் படகுகள் நீர்கொழும்புக்கு விரைந்தன.மூன்று படகுகள் கைதான செய்தியை இலங்கைப் பிரதமர் மகிந்தா இராஜபக்சாவிடம் தெரிவித்தனர். உடனே அவர் கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் நிருபம்சென்னிடம் பேசினார். இந்தியத் தூதர் செய்தியைத் தில்லிக்கு எடுத்துக் கூற, தமிழகக் காவல்துறைத் தலைவர் மூலம் அந்த மூன்று படகுகளையும், பதினைந்து மீனவர்களையும் இராமேஸ்வரம் கரைக்குக் கொண்டு வராமலே திருப்பி அனுப்புமாறு தில்லி ஆணையிட்டது. கைதானோர் யாவரையும் கடலில் வைத்தே படகுகளுடன் இரவு பத்தரை மணிக்கு விடுவித்தனராம்!சிங்கள மீனவர் தற்செயலாகவோ, காலநிலை காரணமாகவோ, தென் கடலாகிய மன்னார்க் குடாவின் இந்தியக் கடல் எல்லைக்குள் வரலாம், கைதாகலாம், உடனே விடுவிக்கப்படலாம். இலங்கை அரசு துரித நடவடிக்கை எடுக்கும், தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கை சிங்கள மீனவருக்கு உண்டு.தங்கள் உயிரைக் குடிக்கும் துப்பாக்கி ரவைகள் இந்திய கடலோரக் காவற்படையிடம் இல்லை என்ற நம்பிக்கையும் சிங்கள் மீனவருக்கு உண்டு. ஏனெனில் இந்தியக் கடலோரக் காவற் படை சுட்டு எந்த ஒரு மீனவரும் இன்னும் இறக்கவில்லை!ஆனால் வடகடலான பாக்கு நீரிணையில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது. தடையை மீறிப் போனால் சுடப்படுவர். அவர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலிருந்து மீன் பிடிக்க வரும் கப்பல்களையும், படகுகளையும் இலங்கைக் கடற்படை விரட்டும், வலைகளைக் கைப்பற்றும், மீனவர் பிடித்த மீனை அள்ளிக் கொண்டு போகும், படகுக்குச் சேதம் விளைவிக்கும், மீனவர்களுக்குக் காயம் விளைவிக்கும், அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோய் இலங்கைக் கொடுஞ்சிறைகளில் அடைக்கும் அல்லது பறவைகளைச் சுடுவது போல் அத்தமிழ் மீனவரைச் சுட்டுக் கொல்லும். கேட்பதற்கு யாருமில்லை!கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியக் கடலோரக் காவற்படை இலங்கைத் தமிழருக்குச் சேர்ந்த ஐநூற்றுக்கும் அதிகமான வள்ளங்களையும், படகுகளையும் கைப்பற்றிக் கடலோரமெங்கும் வைத்திருக்கிறது. அவற்றுள் பல சிதிலமாகி, நைந்து, அழியும் நிலையில் உள்ளன. இவற்றை மீட்டு இலங்கைத் தமிழ் மீனவரிடம் கொடுப்பதற்கு இலங்கை அரசின் முயற்சிகள் கண்துடைப்பாகவே உள.இராமு இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து, கொடுஞ்சிறையில் அடைத்துள்ளது. தமிழக அரசும், அரசியல் தலைவர்களும் தில்லிக்கு இந்த அநீதிகளை எடுத்துச் சொல்லிக் கடிதங்கள் அனுப்பியும் நேரில் கூறியும் வருகின்றனர்.தில்லியின் கருத்தை இலங்கை மதிப்பதில்லை.ஆனால் சிங்கள மீனவரைக் காக்க இலங்கை அரசின் வேண்டுகோளை இந்திய அரசு உடனே நிறைவேற்றுகிறது.கடந்த இருபது ஆண்டுகளாகப் பாக்குநீரிணையின் கடல்வளத்தை முழுமையாகத் தமிழ் மீனவர்கள் பயன்படுத்த விடாத இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் கட்டுக்கடங்காமலுள்ளது. இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகிறது; இந்தியக் கடற்கரை ஓரங்களில் வைத்துத் தமிழக மீனவர்களைச் சுடுகிறது; தனுஷ்கோடித் தீவில் உள்ள சிற்×ர்க் குடிசைகளை ஒருமுறை தீயிட்டுக் கொளுத்துகிறது; பாக்கு நீரிணை முழுவதிற்கும் நாட்டாண்மையாளராகியுள்ளது.கடலட்டை, சங்கு, இறால், சிங்கறால், கெளுத்தி, திருக்கை, பாரை, சாலை, வஞ்சிரம், நெத்தலி, சுறா, கணவாய் என பல்கிப் பெருகும் கடல் உயிரின வளங்களைப் பிடிப்பதையே வாழ்வாகக் கொண்டு இலட்சக்கணக்காகச் செறிந்து, பாக்குநீரிணையின் இரு மருங்கிலும் வாழ்கின்ற தமிழ் மீனவர்களின் எதிர்காலம் இலங்கைக் கடற்படையின் கட்டுக்கடங்கா அட்டூழியத்தினால் கேள்விக்குறியாகி வருகிறது.

Site Meter